Friday 25 July 2014

மாற்று நாடக இயக்கம்: கல்விசார் நாடக அரங்கு முனைவர் அ.மரியசூசை முதல்வர் / தமிழ்த்துறைத் தலைவர் தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.




முதலாக
நாடக வரலாற்றில் கல்விசார் நாடகங்கள் நவீன காலத்தின் புதுவரவு ஆகும். கல்வி நிறுவனங்களின் கலைசார் நடவடிக்கைகளில் நாடகங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றே வந்திருக்கின்றன. பெரும்பாலும் பள்ளி கல்லூரி ஆண்டுவிழாக்கள், முத்தமிழ் விழாக்கள் என்று நாடகங்கள் காலங்காலமாக அரங்கேறி வருகின்றன. இந்த நாடகங்களின் நாடகக் கதை அல்லது கரு போதனாமுறையிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். பெரும்பாலும் நீதிக் கதைகளும் வரலாற்றுச் சம்பவங்களும் இவ்வாறான நாடக நிகழ்வுகளில் இடம்பிடித்துக் கொள்வது உண்டு. இந்நிகழ்வுகளில் பல நேரங்களில் உள்ளடக்கம்கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுவது உண்டு. நாடகத்தில் பங்கேற்கும் குழந்தைகள் அல்லது மாணவர்களின் ஈடுபாடும் பங்கேற்பும் மகிழ்ச்சியுமே முக்கியமானவையாகும்.
அண்மைக்கால மாற்றங்கள்:
மகிழ்வித்தல் (Entertainment) என்ற படிநிலையிலிருந்து சற்றே முன்னேறி, நாடக அரங்கம் (Theatre) என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன என்பது அண்மைக்கால நிகழ்வு. அதாவது கலைநிகழ்ச்சிகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்த நாடகங்கள், கோட்பாட்டுப் புரிதல்களோடு இப்போது தனித்த செயல்பாடுகளாகச் சில கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி அக்கறைகள்:
நாடகம் என்பது பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சியளிப்பது என்பதிலிருந்து வளர்ந்து பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மாறிய காலகட்டம் இது எனலாம். நாடகத்துறையின் செயல்பாடுகள், பயிற்சிகள் தனிமனிதனை நடிகனாக உருவாக்குவன. இந்தப் பயிற்சிகளின் தனித்துவம் அல்லது முக்கியத்துவம் முற்காலத்தில் உணரப்படவில்லை. அவை ஒரு நடிகனை அல்லது நடிப்புத் திறமையை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. கற்பித்தலுக்கும் முறையான பாடத்திட்டங்கள் இல்லை.
ஆனால் நாடகப் பயிற்சிகள் என்பது நடிப்புத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள் என்பதையும் தாண்டி, அவை பயிற்சி பெறும் நடிகனின் அகத்தைக் கட்டமைப்பவை என்ற புரிதல் நவீன நாடகக் கோட்பாடுகளினூடாக வருகிறது.
கூட்டுச் செயல்பாடு:
நாடக உருவாக்கத்தில் நடிகர்கள் ஒன்றிணைந்து வேலை செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கூட்டுச் செயல்பாடு என்பதில் பங்கேற்பாளர்கள் பல்வேறு நிலையில் பல்வேறுவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். குழு உறுப்பினர்களுக்கிடையிலான இணக்கமும் முரண்களும் பல்வேறு படிப்பினைகளைத் தருபவை. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் முடிவெடுக்கவும் துணிந்து நிற்கவும் இவ்வனுபங்கள் உதவிகரமாக இருக்கின்றன.
நடிகனுக்கான பயிற்சி என்பது அடிப்படையில் உடல்-மனம்-குரல் என்ற மூன்று அம்சங்களில் கவனத்தைக் கொண்டுள்ளது. எனவே அவை ஆளுமைத் திறன் பயிற்சிகளாகவும் அமைவது இயற்கையே.
மேற்குறித்த பயிற்சிகள் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலமாகப் புதிய வாசல்களைத் திறக்க முடியும் என்பது நாடகவியலாளர்களின் நம்பிக்கை.

மாற்று நாடக இயக்கம்:
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின்மாற்று நாடக இயக்கம்இத்தகைய பணிகளை முன்னெடுத்த நாடக அமைப்பாகும்.
2003 ஆம் ஆண்டு இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ‘மாற்று ரசனையைஉருவாக்குவதே இதன் இலக்கு என்ற அறிவிப்புடன் இவ்வமைப்புத் தோற்றம் பெற்றது. கடந்த பத்தாண்டுகளில் (2003-2012) எட்டு நாடகத் தயாரிப்புகளை மாற்று நாடக இயக்கம் செய்துள்ளது.
நாடகங்கள்:
பிரபஞ்சன் எழுதியமுட்டை’, எஸ்.எம்..ராம் எழுதியஆபுத்திரனின் கதை’, ஸீக் ஃபிரீட் லென்சின்நிரபராதிகளின் காலம்’, யூஜின் ஐனெஸ்கோவின்பாடம்’, சுஜாதாவின்கடவுள் வந்திருந்தார்’, பெர்டோல்ட் பிரெக்டின், ‘தி காகேசியன் சாக் சர்க்கிள்’, ஜே.பி.பிரீட்ஸ்லி எழுதியதி இன்ஸ்பெக்டர் கால்ஸ்’, ஹபீப் தன்வீரின்சரண்தாஸ் சோர்ஆகிய எட்டு நாடகங்கள் மாற்று நாடக இயக்கத்தின் தயாரிப்புகள் ஆகும்.
இந்நாடகங்கள் கல்லூரி வளாகத்திலேயே தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடகங்கள் மாணவர்களுக்காக இரண்டு காட்சிகளும் பொதுமக்களுக்காக ஒரு காட்சியுமாக நடத்தப்பெற்றுள்ளன. கல்லூரி வளாகத்திலேயே அதிகபட்சமாக ஆறு காட்சிகள் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘சரண்தாஸ் சோர்ஆகும்.
பங்கேற்பு:
நாடகத்தில் நடிப்பு, இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி வடிவமைப்பு, மேடை நிர்வாகம், நெறியாளுகை எனப் பல நிலைகளில் மாணவர்களோடு ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். இது புதிய கூட்டுறவையும் பலத்தையும் நாடக இயக்கத்திற்குச் சேர்த்துள்ளது எனலாம்.
பயிற்சிப் பட்டறைகள்:
மாற்று நாடக இயக்கத்தின் பயிற்சிப் பட்டறைகள் இருநிலைகளில் அமைகின்றன எனலாம். முதலாவதாக, பொதுநிலையில் நாடகப் பயிற்சி பெறுவோர்குறிப்பாக ஆளுமைத் திறன் பயிற்சிபங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் பத்துநாட்கள் பயிற்சிப்பட்டறை நடைபெறுகின்றது.
இரண்டாவதாக, நாடகத் தயாரிப்புக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் அந்த ஆண்டு தயாரிக்கப்படப்போகும் நாடகத்திற்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி பொதுநிலையிலன்றி, நாடகத்தில் பங்கேற்கப் போகும் நடிகர்களுக்கானதாகும்.

பின்னூட்டம்:
நாடகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்றோரின் பின்னூட்டங்கள், நாடகங்களில் பங்கேற்றோரின் பின்னூட்டங்கள் இப்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அறிவிப்பதாக உள்ளன. மாணவர்களிடையே இப்பயிற்சிகளுக்குச் சிறப்பான வரவேற்பு இருப்பதை உணர முடிகிறது.
முடிவாக
-   கல்விசார் அரங்கு என்பது நவீன யுகத்தின் புது வரவாகும். இது நீதிபோதனை அரங்கு அல்லது பொழுதுபோக்கு அரங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய வகையிலான அரங்காகும்.
-   மகிழ்வித்தல் என்னும் நிலையிலிருந்து அரங்கம் என்பது புதிய நோக்கில் பயணப்படத் தொடங்கியது இன்றியமையாத நிகழ்வு ஆகும்.
-   நவீன காலத்துக்கு முந்தைய நாடகப் பயிற்சிகள், நடிப்பைக் கற்பிப்பதையே முழு நோக்கமாகக் கொண்டிருந்தன. அண்மைக்காலப் பயிற்சிகள் நடிகனின் அகத்தைக் கருத்திலெடுத்துக் கொண்டு செயல்படுகின்றன எனலாம்.
-   குழுவாகச் செயல்படுதலில் உள்ள இணக்கமும் முரணும் நடிகர்களுக்குப் பல்வேறு படிப்பினைகளை வழங்குவனவாக உள்ளன. அவை அவர்கள் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவிகரமாக உள்ளன.
-   தற்கால நடிப்புப் பயிற்சிகள் உடல்-மனம்-குரல் ஆகிய மூன்று தளங்களை மையம் கொண்டதாக அமைகின்றன. எனவே இவை சாராம்சத்தில் ஆளுமைத் திறன் பயிற்சிகளாகவும் அமைகின்றன.
-   அண்மைக்காலத்தில் கல்வி நிறுவனங்கள் நாடகப் பயிற்சிகளில் அக்கறை செலுத்தி வருகின்றன.
-   திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம், கல்விசார் நாடக இயக்கமாக உருவாகிக் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
-   எட்டு நாடகத் தயாரிப்புகள், பார்வையாளர்கள், பயிற்சிகள், உத்வேகமளிக்கும் பின்னூட்டம் என்று விரிந்த தளத்தில் நம்பிக்கையுடன் பயணப்படுவது குறிப்பிடத் தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

Unknown said...

மாற்று நாடக சிந்தனை வளருட்டும்

Unknown said...

மாற்று நாடக சிந்தனை வளருட்டும்