Friday 6 May 2011

பங்களிப்பை வேண்டி

நாடக சாலை
வழங்கும்
‘நெடும் பயணம்’ (நாடகம்)

நாடகப் பிரதி: கி.பார்த்திபராஜா
நெறியாளுகை: சே.இராமானுஜம்
மொழி: தமிழ்
நேரம்: 60 நிமிடங்கள்

நாடக சாலை:
நாடக சாலை, வடதமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் இயங்கி வரும் கலை இலக்கியச் செயல் களம். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நாடக ஆர்வலர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கம் என்ற பெயரில் வளாக அரங்கைச் சோதனை முறையில் நடத்தி, 2010 ஆம் ஆண்டில் நாடக சாலை யாக வடிவம் பெற்றிருக்கிறது இக்குழு. மாற்று நாடக இயக்கமாக ஏழு முழுநீள நாடகங்களைத் தயாரித்து அளிக்கை, பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றைச் செய்து, இப்போது நாடக சாலையாக 2011 மார்ச்சில் ஹபீப் தன்வீர் எழுதிய ‘சரண்தாஸ் சோர்’ என்ற நாடகத்தினை மேடையேற்றியிருக்கிறது. திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள், பிற நிறுவனங்களின் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரைத் தொடர்ந்து நாடகம் பார்க்க வரவேற்று இயங்கும் பண்பாட்டு இயக்கமாகவும் நாடக சாலை உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

புதிய நாடக உருவாக்கம்:
நாடக சாலை, தனது இரண்டாவது நாடகத் தயாரிப்பாக, கி.பார்த்திபராஜா எழுதிய ‘நெடும் பயணம்’ என்ற நாடகத்தைத் தயாரித்து வழங்க இருக்கிறது. தேசிய நாடகப் பள்ளி நடத்திய நாடகப் பிரதி உருவாக்கப் பயிற்சிப் பட்டறையில் உருவாக்கப்பட்டு, அவர்களால் சிறந்த பிரதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பிரதிகளுள் ஒன்று இந்நாடகப் பிரதி. தமிழக நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரான பேராசிரியர் சே.இராமானுஜம் இந்த நாடகத்தை நெறியாளுகை செய்கிறார். புதுதில்லிப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறையின் மேனாள் தலைவர் செ.இரவீந்திரன் ஒளியமைப்புச் செய்கிறார்.
தொல்குடி, பேரரசு என்ற முரண்பாட்டில் பேரரசுகளின் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்து போன இனக்குழுக்கள் தங்கள் வாழிடத்தை விட்டு இடம் பெயர்ந்தமை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வரலாறு. பாரி மன்னனின் பறம்புமலை மூவேந்தர்களின் முற்றுகையிலிருக்கும் போது, அந்நாட்டை விட்டு வெளியேறும் குடிகளில் சிலரும், 21 ஆம் நூற்றாண்டில் சவ்வாது மலையை விட்டு, பெங்களூருவுக்குக் கட்டிடத் தொழிலாளிகளாக இடம்பெயரும் சவ்வாது மலைமக்களில் சிலரும் சந்திக்கும் புள்ளியில் நாடகம் தொடங்குகிறது. இரு மலைக் குழுவினரும் தங்களின் மண்ணைப் பறிகொடுத்த அவலத்தைப் பறிமாறிக் கொள்வதில் தொடங்கி, பல்வேறு சமூகச் சிக்கல்களைப் பேசுவதாக நாடகம் நீளுகிறது. 2011 மே, ஜூன் மாதங்களில் நாடக ஒத்திகை திருப்பத்தூரில் நடைபெற உள்ளது. 20 நடிகர்கள் நாடகத்தில் பங்கேற்க உள்ளனர்.

செலவுத் திட்ட முன்வரைவு:
நாடக உருவாக்கச் செலவுகள்: 60,000.00
நெறியாளுனர் மதிப்பூதியம்: 20,000.00
ஒளி அமைப்பாளர் மதிப்பூதியம்: 10,000.00
மேடை வடிவமைப்பாளர் மதிப்பூதியம்: 10,000.00
ஒத்திகைச் செலவுகள்: 25,000.00
மொத்தம்: 1,25,000.00
முழுக்க முழுக்க நாடக ஆர்வலர்களின் உதவியைக் கொண்டு இந்நாடகம் தயாரிக்கப்படுகிறது. தங்களின் மேலான உதவியை அன்புடன் எதிர்நோக்குகின்றோம்.
நாடகத் தயாரிப்புக்கான பொருட்செலவில் உங்களின் சிறு பங்களிப்பையும் வேண்டி நிற்கிறோம்.

முகவரி: முனைவர் கி.பார்த்திபராஜா,
நாடக சாலை,
25, கான்வென்ட் ரோடு,
இரட்டமலை சீனிவாசன் பேட்டை,
திருப்பத்தூர்-635601
வேலூர் மாவட்டம்.

வங்கிக் கணக்கு எண்: ஸ்டேட் பாங்க், திருப்பத்தூர் கிளை,
30353551248 (கே.பார்த்திபராஜா)

நன்றி!