Sunday 13 July 2008

'கிறிக்கி' கூத்து தொடர்பான கட்டுரைகள்

கிறிக்கி
கூத்து தொடர்பான கட்டுரைகள்

பதிப்பாசிரியர் : கோ.பழனி
வெளியீடு : மாற்று, எண்:176, கியூ பிளாக், தொல்காப்பியர் தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி சென்னை - 106.

நூலில் 10 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆன ஒரு துறை பற்றிய போதுமான ஆய்வுகள் நிகழாமை என்பது அநேகமாகத் தமிழ்மொழியில் மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் மேற்கில் ஒரு கருத்துருவம் முன்வைக்கப்பட்டு விட்டால் அதனை முன்னிறுத்திக் கடந்த கால வரலாறு, அரசியல், பண்பாடு, இலக்கியம் என எல்லாவற்றையும் பற்றிய ஆய்வுகள் வந்து குவிந்து விடுகின்றன. பின்னவீனத்துவப் பார்வை அறிமுகமான பிறகு அந்த நோக்கிலான நிறைய ஆய்வு நூல்கள் வெளிவருவதை இணையத்தில் நாம் காண முடிகிறது. ஆனால் தமிழில்? மார்க்சிய அணுகுமுறை ஆய்வு உலகிற்குள் புகுந்து பன்னெடுங்காலம் ஆகிய பின்னரும் கூட, நாம் ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பை ஆய்வு செய்துவிடவில்லை எனில், பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைச் சொல்லவே வேண்டாம்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் பல்கலைக்கழகங்களின் படிக்கட்டுகளில் ஏறிப் பலகாலமாகிவிட்டபோதும். தெருக்கூத்துப் பற்றிய பல ஐயங்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இருக்கின்றன என்பது மிகப்பெரும் வரலாற்று சோகம். தமிழகத்தில் தெருக்கூத்து என்ற அறிவுடைநம்பியின் ஆய்வு வெளிவந்தவுடனேயே அக்களத்தைப் பற்றிக் கொண்டு, மளமளவென ஆய்வுகள் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, தெருக்கூத்து பற்றிய முழுமையான ஆய்வு வெளிவரவில்லை என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழக நிகழ்த்துக் கலைகள் பற்றிய ஆய்வேடுகளைத் திரட்டினால் வண்டி தேறும். ஆனால் அந்தத் தலையணை அளவிலான ஆய்வேடுகளின் விடய கனம் மயிலிறகு எடை பெறுமா என்பது ஐயமே.
பல்கலைக் கழகப் புலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அல்லது ஆய்வு முடிவுகளை வெளிக் கொணர்வதிலும் அதை விவாதத்திற்குட்படுத்துவதிலும் அதிலிருந்து கருத்தை உருவாக்குதலும் அதைச் செயல்திட்டமாகக் கொண்டு மறுபடி இறங்கி வேலை செய்வதும் தெருக்கூத்துக்கு நிகழவில்லை. தெருக்கூத்துக்கு மட்டுமல்ல, அவ்வாறு பல்கலைக் கழக ஆய்வுகள் வளாகத்தையும் தாண்டிக்கொண்டு வெளிவரும் தன்மை அல்லது வழமை பெரும்பாலுமில்லை. பட்டமளிக்கப்பட்ட ஆய்வேடுகளின் எண்ணிக்கையோடு நூலாக்கம் பெற்ற ஆய்வேடுகளின் எண்ணிக்கையை ஒப்புநோக்கினால், எமது கூற்று மிகையில்லை என்பது புலப்படும். அவ்வாறு நூலுருவாக்கம் பெறாமலேயே மிகப்பல ஆய்வேடுகள் தேங்கிவிடுவதால் வளாக ஆய்வுகளில் என்னதான் முன்வைக்கப்படுகிறது, என்னதான் நடந்திருக்கிறது. என்பதை அறிவது மிகவும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

சமீப சில ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வழிகாட்டுதலில் பார்க்கர் நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வேடுகள் பலவற்றை நூலாக்கி வருவது பாராட்டுக்குரிய பணியாகும்.

இந்த நிறைஞர், முனைவர் பட்டங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமலேயே தமிழாய்வுப் புலம் இயங்கி வருகிறது. அவ்வடிப்படையில் நோக்கும்போது, தெருக்கூத்து அறிமுகம் என்பது 1930களிலேயே நிகழ்ந்து விடுகிறது. ஆய்வுகளும் நடைபெறத் தொடங்குகின்றன. ஆனாலும் மிகப்பெரும் வெற்றிடம் நிலைத்து நிற்கிறது. வெற்றிடம் என்பது கூத்துப் பரப்பின் அகற்சியை ஒட்டுமொத்தமாக நோக்கும் போதுதான். ஆனால் அதற்குள்ளும் சிறிது சிறிதாகப் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுத்தான் வந்திருக்கின்றன. ஈ.கிருஷ்ணய்யர், வெங்கட்சாமிநாதன், ந.முத்துசாமி, செ.இரவீந்திரன், ரிச்சர்ட் பிராஸ்கா, ஹென்னா டி புரூயின் போன்று எண்ணற்றோர் கூத்து மற்றும் கூத்துப் பற்றிய ஆய்வுக்குப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். கூத்து ஒட்டுமொத்தத் தமிழரின் தேசிய அரங்கா என்பது குறித்தி விவாதங்களும் நடைபெற்றுள்ளன. ந.முத்துசாமியின் ′அன்று பூட்டிய வண்டி′, மு.ராமசாமியின் ′திரௌபதி பாளையங்கோட்டையில் மானபங்கப்படுத்தப்பட்டபோது′ என விவாதம் குறிப்பிட்ட பாதையில் நகர்ந்தே வந்திருக்கின்றது. தெருக்கூத்தை நவீன அரங்கில் கொணர்ந்து இணைத்துப் பார்த்த ந.முத்துசாமி, வ.ஆறுமுகம், இளையபத்மநாதன், அ.மங்கை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

இத்தகைய பின்புலத்தில்தான் பேராசிரியர் கோ.பழனி அவர்களின் பதிப்பில் தெருக்கூத்து பற்றிய 10 கட்டுரைகள் தொகுப்பு மிக முக்கியமான பதிவாகின்றது. தெருக்கூத்து மரபின் வேர்களைத் தேடி... என்ற பேராசிரியர் செ.ரவீந்திரன் கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுரையாக அமைகின்றது. தமிழ்ச்சமூகத்தில் கூத்து- நாடகம் ஒரு தொடர் விவாதத்தை நோக்கி... என்பது பேராசிரியர் மு.ராமசாமி அவர்களின் கட்டுரை. தெருக்கூத்து - கலைவரலாறு- தமிழ்ச்சமூகம் உரையாடலுக்கான குறிப்புகள் என்ற கட்டுரையைப் பேராசிரியர் வீ.அரசு எழுதியுள்ளார். தெருக்கூத்து நிகழ்த்தும் பாலினக் கட்டமைப்பு என்பது அ.மங்கை அவர்களின் கட்டுரை. ந.முத்துசாமி, கோ.பழனி, இரா.சீனிவாசன், ஏ.கே.செல்வதுரை, சி.ஜெயசங்கர் ஆகியோருடைய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

கட்டுரைகளைக் குறித்த விரிவான விமர்சனங்களை விரைவில் இணைத்துத் தரவுள்ளேன்.

Friday 11 July 2008

புரிசை தெருக்கூத்துப்பயிற்சிப் பள்ளி






யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார வரைபடத்தில், தமிழர்களின் பாரம்பரிய அரங்கான தொருக்கூத்தும், புரிசை கிராமமும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்தை மூட்டெடுத்துப் பரவலாக்கும் முயற்சியில் தம் வாழ்நாளைச் செலவிட்டவர். அவருடைய நினைவு நாளினை கலைப் பண்பாட்டுத் திருவிழாவாகப் புரிசை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். அத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு கலைத்துறையைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டு வருகின்றனர். நவீன ஊடகங்களின் பெரு வெடிப்பு, மரபார்ந்த கலைகள் பலவற்றின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து வந்திருக்கின்றது. அச்சிதைவிலிருந்து தெருக்கூத்தும் தப்ப முடியவில்லை. தெருக்கூத்தினை முறையாகக் கற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இளம் கலைஞர்களின் வரவு முற்றிலுமாக இல்லை. எனவே தெருக்கூத்தின் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. தெருக்கூத்து வடிவத்தில் புதிய உள்ளடக்கங்களைப் பெய்து, பரிசோதனை முயற்சிகளைச் செய்வதற்குக் கூட, ஆளில்லை. இந்நிலை மாற, தெருக்கூத்துப் பள்ளி ஒன்று தொடங்க வேண்டும் என்பது மறைந்த புரிசை கண்ணப்பத்தம்பிரான் அவர்களின் கனவு. ஆனால் அவருடைய கனவு, அவர் வாழும் காலத்தில் நிறைவேறவில்லை.
கண்ணப்பத்தம்பிரான் அவர்களின் புதல்வர்கள் கலைமாமணி சம்பந்தத்தம்பிரான், காசித்தம்பிரான் ஆகிய இருவருடைய முயற்சியில் சில மாதங்களுக்கு முன்பு புரிசை கிராமத்தில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. 2008 ஆம் ஆண்டுப பிப்ரவரி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டன. முதற்பயிற்சிக் குழுவில் 15 மாணவர்கள் கலந்துகொண்டனர். முறையான பயிற்சி புரிசை கிராமத்தில் தொடங்கியபோதும், அக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவர்கள் வந்து பங்கேற்கவில்லை. சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் ஏற்கனவே நவீன நாடகத்துறை மற்றும் நாட்டியத்துறையில் ஈடுபட்டு வரும் இளம் கலைஞர்களே இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். ′′கிராம்ப்புற மாணவர மாணவிகளுக்கு தெருக்கூத்தின் மீது இயல்பாகவே ஒரு ஈடுபாடு உண்டு. ஆனால் அவர்கள் அதை முறையாக்க் கற்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படியே நினைத்தாலும் சமூகச் சூழல் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மற்றும் அவர்தம் பெற்றோருக்கும் ஒரு உந்துதல் ஏற்படுத்துகிற வகையில் ஒரு தொடக்கமாக சென்னையிலிருந்து சில ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்க முடிவு செய்து அதைச் சிறந்த முறையில் நிறைவு செய்தும் உள்ளோம்.′′ என்கிறார் காசித்தம்பிரான்.

பயிற்சி பெற்ற 15 பேரில் 4 பேர் பெண்கள். இருவர் மூன்றாம் பாலினர்(திருநங்கையர்). புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் பெயரர்களும் பெயர்த்திகளும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மூன்றுமாதப் பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி மாணவர்கள் இந்திரஜித் என்னும் தெருக்கூத்தைப் புரிசை கிராமத்தில் அரங்கேற்றினர்.
அரங்கேற்ற விழாவில் தில்லிப் பல்கலைக் கழகத்தின் தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் செ.இரவீந்திரன் , கவிஞர்அ.வெண்ணிலா, கவிஞர் ஆரிசன், மூன்றாம் அரங்கு கே.எஸ்.கருணாபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் மிகவும் புகழ்ந்துரைக்கப்படுகின்ற இந்திரஜித், இலங்கை வேந்தன் இராவணனின் புதல்வன். வில்லாளரை விரல்விட்டு எண்ணினால், எழுந்து முதல் நிற்பவன் இந்திரஜித் என்று கம்பன் பாராட்டுவான். புலவர் குழந்தையின் இராவணகாவியத்தில் இந்திரஜித் சித்தரிக்கப்படும் விதம் மிகவும் சுவையானது. அத்தகைய இந்திரஜித் தன் தந்தைக்காகப் போரில் மடியும் கதையினை மிக அருமையான தெருக்கூத்தாக நடத்தினர். மூன்று மணிநேரம் புதிதாகப் பயிற்சி பெற்ற மாணவர்களை வைத்து நடத்தினார்கள் என்பது புலப்படாத வகையில் சிறப்பாக கூத்து அமைந்தது. உச்சத்தில் குரலெடுத்துப் பாடுவதாகட்டும், வியப்பை ஏற்படுத்தும் வகையிலான துரித அடவுகளாகட்டும் நடிகர்கள் சிறப்பாகவே செய்தனர். தெருக்கூத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களைக் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திவிட்டதில் சம்பந்தத்திற்குப் பெரும் பங்கு உண்டு. ஆம். பயிற்சி ஆசிரியர் சம்பந்தம் அவர்களின் கடுமையான உழைப்பின் பயனை, அவருடைய மாணவர்கள் நடத்திக்காட்டிய தெருக்கூத்தில் காண முடிந்தது. இலக்குவனாக நடித்த இளைஞருக்குத் தமிழே தெரியாது. கூத்துப் பயிற்சிக்கு வந்த பிறகே, கொஞ்சம் பேசக் கற்றிருக்கிறார். ஆனால் அவருடைய பாடல்களிலாகட்டும், வசனங்களிலாகட்டும் அது வெளிப்படவே இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் எவ்வாறு சரளமாகப் பேசுவாரோ அப்படிப் பேசிப் பாடி நடித்தார். பெண் பாத்திரங்களை ஏற்று நடித்த அஷ்வினி மற்றும் கௌரி இருவருமே மிகச் சிறப்பாகச் செய்தனர். இரவு 11 மணிக்குக் கூத்து நிறைவுற்ற போதிலும் மீண்டும் மக்கள் தொலைக்காட்சிக்கென ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்ததால், சாப்பிடக்கூட நேரமில்லாமல் அடுத்த நான்கு மணிநேரம் அதே இந்திரஜித் கூத்தினை ஆடுவதற்குத் தயாரானார்கள் நடிகர்கள். மூன்று மணிநேரம் ஆடிக் களைத்த களைப்பு அவர்கள் ஒருவரின் முகத்திலும் தென்படவில்லை. பாரம்பரியக் கூத்துக் கலைஞர்களைப் போல விடிய விடியக் கூத்தாடிய அவர்களது உற்சாகம் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டப்படவேண்டியது. பல தலைமுறைகளாகத் தங்கள் குடும்பத்தினர் போற்றிப் பாதுகாத்துவரும் கூத்து வடிவத்தைக் கற்றுக் கொண்டு, ஆடியது இனிய அனுபவம் என்று பகிர்ந்து கொண்டனர் அஷ்வினியும் கௌரியும். ′′இவர்கள் தெருக்கூத்தில் ஆடவேண்டும் என்று கூட, நான் எதிர்பார்க்கவில்லை; குறைந்த பட்சம் குழுவை நிர்வகிக்கக்கூடிய நிர்வாகிகளாகவாவது ஆக வேண்டும். அப்போதுதான் எங்களது அடுத்த தலைமுறையும் தெருக்கூத்தைத் தலையில் சுமந்து செல்கிறது என்ற திருப்தி ஏற்படும்...′′ என்றார் கண்ணப்ப சம்பந்தன்.
புரிசை கூத்துக் குழுவினரின் உபசரிப்பும் அன்பும் தோழமையும் பார்வையாளர்களாகச் சென்றிருந்த அனைவரையுமே நெகிழவைத்தது.
கூத்துப் பள்ளிகள் புரிசையில் மட்டுமல்ல, பெருங்கட்டூர் இராஜகோபால் வாத்தியார் அவர்களின் முயற்சியால் காஞ்சிபுரத்தில் கட்டைக்கூத்துப் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் எழுத்தாளர் மு.ஹரிகிருஷ்ணன் வழிகாட்டுதலில் களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இயங்கி வருகிறது. இவை ஆரோக்கியமான அறிகுறிகள். அடுத்த தலைமுறைக்கு தனது பாரம்பரியமான கலைச்செல்வத்தைக் கையளிக்க முயலும் அக்கறை கொண்ட மனிதர்களின் உன்னதமான செயல்பாடுகள் இவை. மிகவும் தொன்மையான, செவ்வியல் தன்மை மாறாதிருக்கிற புரிசைககூத்து போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை கூத்துப் பயிற்சிப் பள்ளி சாத்தியமாக்கும் என்றே தோன்றுகிறது.

மாற்று நாடக இயக்கத்தின் நாடக அளிக்கைகள்:

2003 இல் பிரபஞ்சனின் முட்டை

2004 இல் எஸ்.எம.ஏ.ராமின் ஆபுத்திரனின் கதை

2005 இல் ஸீக்பிரீட் லென்ஸின் நிரபராதிகளின் காலம்

2006 இல் யூஜின் ஐனெஸ்கோவின் பாடம்

2007 இல் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார்

2008 இல் பெர்டோல்ட் பிரெக்டின் தி காகேசியன் சாக் சர்க்கிள்

எனது புதிய நூல்

நவீன நாடகங்கள் பற்றியும், நவீன நடகப்பிரதிகள் பற்றியும் நான் எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. தலைப்பு: பிரதியிலிருந்து மேடைக்கு... வெளியீடு: தோழமை வெளியீடு. விரைவில் நூல் வரவுள்ளது.

Thursday 10 July 2008

நாடகம் பற்றிய ஆய்வேடுகள்

தமிழ் நவீன நாடகங்கள் பற்றி இரண்டு முனைவர் பட்ட ஆய்வுகள் தற்போது புத்தகங்களாக வந்துள்ளன. முதலாவது முனைவர் மு.ஜீவாவின் "தமிழகத்தில் நவீன நாடக இயக்கங்கள்". இரண்டாவது முனைவர் கோ.ரா.இராசா ரவிவர்மாவின் "நவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு". முனைவர் பட்ட ஆய்வு என்றாலும் உயிப்புள்ள ஆய்வுகளாக இவை அமைந்துள்ளன.

தமிழகத்தில் நவீன நாடக இயக்கங்கள் - முனைவர் மு.ஜீவா

வெளியீடு : the parkar, 293, ahamathu shopping complex, second floor, royappettah high road, சென்னை - 600014. Rs.170.00

நவீன தமிழ் நாடகங்களில் - முனைவர் கோ.ரா.இராசா ரவிவர்மா

வெளியீடு : the parkar, 293, ahamathu shopping complex, second floor, royappettah high road, சென்னை - 600014. Rs.300

Wednesday 9 July 2008

உங்களோடு...

வணக்கம். தமிழ் நவீன நாடகத் துறை குறித்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். நிறைய பேசலாம். அரசியல், இலக்கியம், கலை, சமூகம் என்று எல்லாவற்றையும் பேசுவோம்.